Friday, August 21, 2020

சின்னிக் கிருஷ்ணன்

    1980 காலக்கட்டங்களில் கடலூரில் சின்னி கிருஷ்ணன் என்பவர் ஒரு பள்ளிக்கூடத்தில் கணித ஆசிரியராக வேலைப் பார்த்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு மருந்துகளை தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்கி நடத்திக் கொண்டு வந்தார்.

அந்த நேரத்தில் தான் யுனிலீவர் (Unilever) நிறுவனமும், பாண்ட்ஸ் (Ponds) நிறுவனமும் இந்தியாவில் முதன்முதலாக ஷாம்புவை அறிமுகப்படுத்தினார்கள். ஆனால், அந்த நிறுவனங்கள் ஷாம்புவை 100ml, 200ml போன்ற பாட்டில்களில் மட்டும் தான் விற்பனை செய்துக் கொண்டிருந்தார்கள்.

Shampoo in Bottles

ஒரு பாட்டிலின் விலை 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை இருந்தது. இதனால் மேல்தட்டு மக்கள் மட்டுமே ஷாம்புவை பயன்படுத்த முடிந்தது. நடுத்தர மக்களும், சாதாரண மக்களும் ஷாம்புவை வாங்க முடியாத நிலை இருந்தது.

அதே போல் கிராமத்து மக்கள் அந்த ஷாம்பு பாட்டில்களை வாங்கினாலும் பயன்படுத்த முடியாத நிலை. காரணம், அந்த காலகட்டத்தில் கிராமங்களில், வீட்டில் குளியலறை வசதி கிடையாது. அருகில் இருக்கக்கூடிய கிணற்றிலோ அல்லது ஆற்றிலோ சென்று தான் குளிக்க வேண்டும். அங்கு இந்த விலை மதிப்புள்ள ஷாம்பு பாட்டிலை எடுத்துக் கொண்டு சென்றால் மற்றவர்களும் பயன்படுத்துவார்கள். மேலும் அந்த பாட்டிலை பத்திரமாக எடுத்து சென்று, மீண்டும் திரும்பி பத்திரமாக உடையாமல் எடுத்துக் கொண்டு வர வேண்டும். இதனால் வசதி படைத்தவர்கள் மட்டுமே ஷாம்புவை பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

சாதாரண மக்கள் ஷாம்புவை பயன்படுத்த முடியாத நிலை. இந்த இடத்தில் தான் சின்னி கிருஷ்ணன் அவர்கள் மாற்றி யோசித்தார்.

ஷாம்பு பெரிய பாட்டில்களில் விற்பனையாவதால் தானே இவ்வளவு விலை அதிகமாக இருக்கிறது என்று யோசித்தார். இதே ஷாம்புவை 1ml, 2ml பாக்கெட்களில் அடைத்து விற்பனை செய்தால் விலையும் குறையும். அதே சமயம் சாதாரண மக்களும் பயன்படுத்துவார்களே என்று வித்தியாசமாக யோசித்தார்.

ஆனால், அதில் இருந்த சிக்கல் என்னவென்றால் பவுடர் போன்று இருக்கும் திட பொருட்களை எளிமையாக பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்ய முடியும். ஆனால், ஷாம்பு போன்ற திரவப் பொருளை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்வது கடினம். அது மட்டுமல்லது, ஷாம்பு அந்த பாக்கெட் வழியாக கசிந்து வெளியேறிவிடும் என்று எல்லோரும் சொன்னார்கள்.

ஆனால், சின்னிக் கிருஷ்ணன் அவர்கள் தன்னுடைய விடா முயற்சியால் ப்ளாஸ்டிக் பாக்கெட்டுகளைப் பயன்படுத்தி ஷாம்பு போன்ற திரவப் பொருட்களையும் கசிவு ஏற்படாமல் சின்ன சின்ன பாக்கெட்களில் அடைத்து விற்பனை செய்ய முடியும் என்று நிரூபித்துக் காட்டினார்.


Just do it.. Nothing is Impossible

இந்த உலகத்திலேயே ஷாம்பு போன்ற திரவப் பொருளை சின்ன சின்ன பாக்கெட்களில் விற்பனை செய்ய முடியும் என்று நிரூபித்து விற்றுக் காட்டியது ஒரு தமிழன் சின்னிக் கிருஷ்ணன் அவர்கள் தான்.

அவர் மார்க்கெட்டில் அறிமுகப்படுத்திய இந்த 'வெல்வெட்' ஷாம்பு வியாபார ரீதியாக மிகப்பெரிய வெற்றியடைந்தது. அவருடைய இந்த வித்தியாசமான சிந்தனை மொத்த ஷாம்பு தொழிலிலும் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும்.


Velvet Shampoo in Sachet Pocket

அன்று மட்டுமல்ல.. இன்று வரை பாட்டில்களில் விற்பனையாகக்கூடிய ஷாம்புவை விட, பாக்கெட்டில் விற்பனையாகக்கூடிய ஷாம்புக்கள் தான் அதிகம். அதைவிட, இந்த பாக்கெட்டில் விற்பனை செய்யப்படக்கூடிய ஷாம்புக்கள் தான் அதிக லாபத்தையும் நிறுவனத்திற்கு கொடுப்பதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

இன்றைய காலக்கட்டத்தில் இந்த பாக்கெட் ஷாம்புவின் மார்க்கெட் நிலவரம் பல இலட்சம் கோடி ரூபாய்.


The Legend of Disruption award was conferred on late Chinni Krishnan  (invented the Sachet) by YourStory. Shradha Sharma, Late Chinni Krishnan’s sons C.K. Ranganathan, C.K. Kumaravel, C.K. Ashok Kumar, and C.K. Rajkumar, and Prof Bala V. Balachandran who handed over the award 

ஒரு பொருளை மார்க்கெட்டிற்கு கொண்டு வருவது பெரிய விஷயமல்ல. அந்த பொருளை அனைத்துத் தரப்பு மக்களும் பயன்படுத்துவது போன்று விற்பனை செய்ய வேண்டும். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் எளிமையாக கிடைப்பது போன்று அவர்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பது தான் முக்கியம்.

அதனால் நீங்களும் உங்கள் தொழிலில் உங்கள் பொருட்களை எப்படி எளிமையாக மக்களிடம் கொண்டு போய் சேர்க்கலாம் என்று வித்தியாசமாக சிந்தியுங்கள். நீங்களும் வரலாற்றில் இடம்பெறலாம்.

All the best.

0 comments:

Post a Comment