Thursday, May 15, 2025

லல்லு பிரசாத் யாதவ்

             இந்தியாவிற்கு முகலாயர்கள் ஆட்சி பொற்காலம். சோழர்கள் ஆட்சி பொற்காலம் என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அது போல இந்திய இரயில்வேதுறைக்கே பொற்காலம் என்று சொன்னால் அது லல்லுபிரசாத் யாதவ் அவர்கள் இரயில்வே மந்திரியாக இருந்த 2004 முதல் 2009 ஆம் ஆண்டுகள் தான்.

லல்லு இரயில்வே மந்திரி ஆவதற்கு முன்னால் புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர் ராகேஷ் மோகன் தலைமையில் 18 பேர் கொண்ட ஒரு குழு ’நஷ்டத்தில் சென்றுக் கொண்டிருக்கும் இரயில்வே துறையை எப்படி வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லலாம்’ என்று ஆய்வு செய்தது. ஆனால், இந்த குழு  ”இரயில்வே துறையை இன்னும் இந்திய அரசாங்கமே தூக்கி சுமப்பது வீண் சுமை. நஷ்டத்தில் இருக்கக்கூடிய இரயில்வே துறையை யாராலுமே காப்பாற்ற இயலாது. அதனால், இந்த துறையை எவ்வளவு சீக்கிரம் தனியாருக்கு மாற்றுகிறோமோ அது அரசாங்கத்திற்கு நல்லது” என்று அறிக்கைக் கொடுத்தது.


இது போன்ற ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தான் இரயில்வே மந்திரி ஆனார் லல்லு பிரசாத் யாதவ். லல்லு ஏறகனவே மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் வேறு கைதானவர். இனி லல்லு இரயில்வே துறையையே ஊழல் சாம்ராஜ்ஜியமாக மாற்றிவிடுவார் என்று மொத்த இந்தியாவும் எதிர்பார்த்தது. ஆனால், லல்லு பிரசாத் ஆடிய ஆட்டமே வேறு. எதிர்கட்சிகள் மட்டுமல்ல உடன் இருந்த கூட்டணி கட்சிகளே மூக்கு மேல் விரல் வைக்கும் அளவுக்கு லல்லு சிறப்பாக நிர்வகித்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

லல்லு மந்திரி ஆனதும் செய்த முதல் வேலை போக்குவரத்துப் பற்றி அத்தனை நுணுக்கங்களும் தெரிந்த “சுனில் குமார்” என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியை தன்னுடைய உதவியாளராக Officer on Special Duty-ல் நியமித்தார்.

ஜூலை 6, 2004 ஆம் ஆண்டு லல்லு பிரசாத் தன்னுடைய முதல் இரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அதற்கு முன்பு சில வருடங்களாகவே இரயில்வே பட்ஜெட் என்றாலே டிக்கெட் விலையை ஏற்றுவது தான் என்ற எண்ணம் பெரும்பாலும் மக்களிடையே இருந்தது.  ஆனால், லல்லு டிக்கெட் விலையை ஏற்றவில்லை. மாறாக டிக்கெட் விலையைக் குறைத்தார்.

இரண்டாம் வகுப்பு டிக்கெட்கள் 1% என்றும், இரண்டாம் வகுப்பு ஏசி டிக்கெட்களுக்கு 10% என்றும், முதலாம் வகுப்பு ஏசி டிக்கெட்களுக்கு 18% என்றும் டிக்கெட் விலையைக் குறைத்தார். இப்படி தான் ஆடிய முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்தார் லல்லு பிரசாத் யாதவ்.

இப்படி டிக்கெட் விலையை குறைத்துவிட்டால் மட்டும் மக்கள் அனைவரும் பேருந்தில் போகாமல் இரயிலில் சென்று இரயில்வே துறை இலாபத்தி சென்றுவிடப் போகிறதா என்று அனைவரும் நினைத்தார்கள்.

ஆனால், அடுத்து எப்படி மக்களை பேருந்தில் இருந்து இரயில்வே பக்கம் திருப்பலாம் என்று லல்லு பிரசாத் யோசித்துக் கொண்டே இருந்தார்.

மக்கள் ஏன் இரயிலில் பயணிக்கவில்லை?

இரயிலில் முன்பதிவு டிக்கெட் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை.

டிக்கெட் கிடைக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?

புதிதாக புது இரயில்கள் இயக்க வேண்டும்.

ஆனால், புது இரயில்கள் இயக்கும் அளவுக்கு இரயில்வே துறையில் பணம் இல்லை.

இப்பொழுது என்ன செய்வது?

இந்த இடத்தில் தான் லல்லு பிரசாத் கொஞ்சம் வித்தியாசமாக யோசித்தார்.

புது இரயில் விடாமல் எப்படி இரயில்களில் இருக்கும் இருக்கைகளை அதிகப்படுத்துவது என்று யோசித்தார்.

அனைத்து இரயில்களிலும் 16 அல்லது 18 பெட்டிகள் தான் இருந்தன. லல்லு பிரசாத் அதனை மாற்றி எஞ்சின் சக்தியை 24 பெட்டிகள் இழுக்கும் அளவுக்கு அதிகப்படுத்த அறிவுருத்தினார். அதாவது ஒவ்வொரு இரயிலிலும் கூடுதலாக எட்டு பெட்டிகள் இணைக்கப்பட்டன.

For Example,

ஒரு பெட்டிக்கு 72 இருக்கைகள் என்று கணக்கு செய்து கொள்ளுங்கள்.

16 பெட்டிக்கு 16 * 72 = 1152 இருக்கைகள்.

அதுவே 24 பெட்டிகள் என்றால் 24 * 72 = 1728 இருக்கைகள்.

இதன்மூலம் ஒவ்வொரு இரயிலிலும் கூடுதலாக 50 சதவீத பயணிகள் பயணிக்க முடிந்தது.


அதே போல் அனைத்து இரயில்களும் 45-50 Kmph வேகத்தில் தான் ஓடிக்கொண்டிருந்தது. எஞ்சின் சக்தியை அதிகரித்ததன் மூலம் மணிக்கு 55 கிமீ வேகத்தில் இயங்குவது போன்று அதிவேக இரயில்களாக மாற்றினார். 

அதிவேக இரயில்களில் ஒரு டிக்கெட்டுக்கு 20 ரூபாய் கூடுதலாக அரசாங்கத்திற்கு கிடைத்தது.

இந்த இரண்டு செயல்கள் மூலமாகவே கோடிக்கணக்கான ரூபாய் இரயில்வே நிர்வாகத்திற்கு இலாபமாக கிடைத்தது.

பயணிகள் இரயிலில் மாற்றம் கொண்டுவந்த பிறகு சரக்கு இரயில் பக்கம் தன்னுடைய கவனத்தை திருப்பினார் லல்லு பிரசாத்.

இரும்புத் தாது, கரி உரம், சிமெண்ட் போன்ற பொருட்கள் எல்லாம் காந்தி காலத்தில் இருந்து மானிய விலையில் சரக்கு இரயிலில் சென்றுக் கொண்டிருந்தது. அந்த பொருட்களின் விலையெல்லாம் பல மடங்கு உயர்ந்திருந்தது. ஆனால், இதன் சரக்குக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று எந்த இரயில்வே மந்திரிக்கும் தோன்றவே இல்லை. லல்லு பிரசாத் இந்த சரக்குக் கட்டணத்தை உயர்த்தினார்.

அடுத்தது ஒரு இரயிலில் 20.3 டன் அளவுக்குதான் எடை ஏற்ற வேண்டும். இதற்கு மேல் ஏற்றினால் வண்டியின் Axle Load என்று சொல்லப்படக்கூடிய அச்சு முறிந்துவிடும். அதனால், ஏகப்பட்ட விபத்துகள் ஏற்படும் என்று கூறினார்கள். இந்த விஷயத்தில் லல்லு பிரசாத் அவர்களே நேரடியாக களத்தில் இறங்கி பல சரக்கு ஏற்றுகிற இடங்களுக்கு சென்று பார்த்து அங்கிருக்கக்கூடிய ஊழியர்கள், பொறியியல் வல்லுநர்கள் என்று பலரையும் கலந்தாலோசித்தார். அப்பொழுது தான் லல்லு பிரசாத் அவர்களுக்கு தெரிந்தது, ’ஒவ்வொரு இரயிலிலும் 22.9 டன் வரை எடையை ஏற்றினாலும் இரயிலின் பாதுகாப்பு எந்த பாதிப்பும் வராது’ என்று.

ஒருவேளை விபத்து நடந்துவிடுமோ என்று பயந்தே இதற்கு முன்பு இருந்த அமைச்சர்கள் இந்த வரம்பை அதிகப்படுத்தவில்லை என்று லல்லு பிரசாத் தெரிந்துக்கொண்டார். அதனால், எடையை அதிகரிக்கும் துணிச்சலான முடிவை எடுத்தார்.  உடனே, சரக்கு இரயிலின் உச்சவரம்பை 22.9 டன் வரை உயர்த்தினர்.

ஒரு டன்னுக்கு 500 கோடி வீதம், கூடுதலான் 2.6 டன்னுக்கு 1300கோடி ரூபாய் எந்த செலவுமே இல்லாமல் இரயில்வே நிர்வாகத்திற்கு கிடைத்தது.

இதே போன்று இரயில்வே நிர்வாகத்தின் விளம்பரத்தின் மூலம் கிடைத்த வருமானம் 2005 ஆம் ஆண்டு 50 கோடி. லல்லு பிரசாத் ஆட்சியில் அது 78 கோடியாக உயர்ந்தது. கேட்டரிங் மூலம் கிடைத்த வருமானம் 42 கோடி. லல்லுப் பிரசாத் ஆட்சியில் 76 கோடி.

இது போன்று தன்னுடைய மாத்தி யோசிக்கும் திறன், துணிச்சலான முடிவெடுக்கும் திறனால் தன் ஆட்சியை இரயில்வே துறையின் பொற்காலமாக மாற்றினார்.

லல்லு பிரசாத் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இரயில்வே துறையின் கையிருப்பு பணம் 142 கோடி. லல்லு பிரசாத் ஆட்சியில் அது 12,000 கோடியாக உயர்ந்தது.


நீங்கள் நினைக்கலாம். இது எல்லாம் லல்லு பிரசாத் அவர்களா செய்தார். அவருடன் இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் ஆலோசனைகள் தானே என்று நீங்கள் நினைக்கலாம். அவர்கள் அனைவரும் அதற்கு முன்பும் அங்கு தான் இருந்தார்கள். ஆனால், அவர்களை சுதந்திரமாக செயல்பட வைத்து அவர்கள் கூறிய கருத்துக்களை கேட்டு துணிச்சலான முடிவெடுத்தவர் லல்லு பிரசாத் யாதவ் தான்.

இன்றைய தேதியில் உலகின் தலைச்சிறந்த வணிக பள்ளி என்றால் அது “Harvard Business School” தான். இந்தியாவில் சிறந்த வணிக பள்ளி “I.I.M Ahmedabad”. இந்த இரண்டு இடங்களிலுமே லல்லுப் பிரசாத் இரயில்வே துறையில் செய்த மாற்றங்களை ஆய்வுத் தொகுப்பாக வைக்கப்பட்டு இன்றளவும் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இனி என்றாவது பேருந்துக் கட்டணத்தை விட, 50% குறைவான செலவில் இரயிலில் பயணம் செய்தால் அந்த சமயம் லல்லுவின் இந்த வித்தியாசமான சிந்தனையை சிறிது நினைத்துப் பாருங்கள்.

0 comments:

Post a Comment